பத்திரம் பிழைத்திருத்தல் (Rectification Deed) – சட்ட விளக்கம் 1. பத்திரம் பிழைத்திருத்தல் என்றால் என்ன? பத்திரங்களில் ஏற்படும் எழுத்துப் பிழை, எண் பிழை, வார்த்தை பிழை போன்றவற்றை சட்டப்படி சரிசெய்ய செய்யப்படும் பதிவு ஆவணமே பிழைத்திருத்தல் பத்திரம் ஆகும். இதனை சீர்செய் ஆவணம் அல்லது Rectification Deed என்றும் அழைப்பர். 2. எந்த ஆவணங்களுக்கு பிழைத்திருத்தல் செய்யலாம்? கிரயப் பத்திரம், செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை, உயில், பவர் பத்திரம், அடைமாணம், விடுதலை பத்திரம், ஒப்பந்த பத்திரம் போன்ற அனைத்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்கும் பிழைத்திருத்தல் செய்யலாம். 3. பிழைத்திருத்தலின் வகைகள் பிழைத்திருத்தல் இரண்டு வகைப்படும்: சாதாரண பிழைத்திருத்தல் உரிமை மாறும் பிழைத்திருத்தல் 4. சாதாரண பிழைகள் என்றால் என்ன? திசை, ஊர்ப் பெயர், தந்தை பெயர், இனிஷியல், கதவு எண் போன்றவை உரிமை மாற்றத்தை பாதிக்காத பிழைகள். இவை சாதாரண பிழைகள் எனக் கருதப்படுகின்றன. 5. பெயர் பிழை – ஏன் திருத்தம் அவசியம்? பட்டாவில் உள்ள பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் பொருந்தாமல் இருந்தால், சொத்து வாங்குபவர்கள் தயங்குவார்கள். இந்த சிக்கலை சரிசெய்ய சாதாரண பிழைத்திருத்தல் பத்திரம் போடப்படுகிறது. 6. பொதுவாக ஏற்படும் சாதாரண பிழைகள் செக்குப் பந்தியில் திசை தவறு, பட்டா எண், சர்வே எண், முன்பத்திர எண், இனிஷியல், தந்தை பெயர், கதவு எண், ஊர்ப் பெயர் போன்ற பிழைகள் சாதாரண பிழைகளாகும். 7. வரைபடம் மற்றும் எல்லை பிழைகள் கிரயப் பத்திரத்தில் வரைபடம் விடுபட்டிருப்பது, மின் இணைப்பு எண் தவறு, தெருப்பெயர் மாற்றம், எல்லை அல்லது திசை பிழைகள் இருந்தால் அவற்றையும் சாதாரண பிழைத்திருத்தல் மூலம் சரிசெய்யலாம். 8. சாதாரண பிழைத்திருத்தலுக்கான செலவு சாதாரண பிழைத்திருத்தல் பத்திரத்திற்கு முத்திரைத் தீர்வை ரூ.100/- மட்டுமே. பொதுவாக முழுச் செலவு ரூ.500/-க்குள் முடியும். 9. உரிமை மாறும் பிழை என்றால் என்ன? 2 ஏக்கர் 1 சென்ட் என்பதை 1 ஏக்கர் 2 சென்ட் என தவறாக எழுதிவிட்டால், உரிமை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படும். இத்தகைய பிழைகள் உரிமை மாறும் பிழைகள் ஆகும். 10. உரிமை மாறும் பிழைத்திருத்தலுக்கான கட்டணம் சரியான அளவை குறிப்பிட்டு, அந்த அளவுக்கான அன்றைய சந்தை மதிப்பின் அடிப்படையில் முழு முத்திரைத் தீர்வை செலுத்தினால்தான் உரிமை மாறும் பிழைத்திருத்தல் பதிவு செய்யப்படும். 11. அதிகமாக கட்டிய முத்திரைத் தீர்வு திரும்ப கிடைக்குமா? முன்பு அதிக பரப்பளவிற்கு முத்திரைத் தீர்வை கட்டியிருந்தாலும், பின்னர் குறைத்த அளவிற்கு திருத்தம் செய்யும்போது, ஏற்கனவே செலுத்திய தொகையை திரும்பப் பெற முடியாது. 12. விற்பனையாளர் இறந்திருந்தால் என்ன செய்வது? சொத்தை விற்ற நபர் உயிருடன் இல்லாத நிலையில், அவருடைய சட்டப்பூர்வ வாரிசுகள் மூலம் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம். 13. வாரிசுகளே இல்லையெனில் தீர்வு என்ன? முதன்மை வாரிசுகள் இல்லையெனில், இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை வாரிசுகள் மூலம் செய்யலாம். அதுவும் சாத்தியமில்லையெனில், நீதிமன்றத்தை அணுக வேண்டும். 14. விற்பனையாளர் ஒத்துழைக்காவிட்டால்? சொத்தை விற்ற நபர் உயிருடன் இருந்தும் பிழைத்திருத்தல் செய்ய மறுத்தால், நீதிமன்ற வழக்கின் மூலமே தீர்வு பெற முடியும். 15. முழுமையாக தவறான விவரங்கள் இருந்தால்? சர்வே எண், விஸ்தீரணம், நீளம், அகலம் அனைத்தும் தவறாக இருந்தால், பிழைத்திருத்தல் போதாது. புதிய கிரயப் பத்திரம் போட வேண்டிய நிலை வரும். 16. பதிவு முடிந்த பின் கைமுறையில் திருத்தலாமா? பதிவு முடிந்த பிறகு, அமிலம், ஒயிட்னர், பேனா மூலம் திருத்தம் செய்வது முற்றிலும் சட்டவிரோதம். 17. கைமுறையில் திருத்தினால் செல்லுமா? மனை எண் 11 என்பதை 10 என கைமுறையில் திருத்தினாலும், பதிவு அலுவலக பதிவுகளில் பழைய எண் தான் செல்லுபடியாகும். 18. சட்டவிரோத திருத்தத்தின் விளைவு இத்தகைய சட்டவிரோத திருத்தங்கள் மூலம் எந்த உரிமை மாற்றமும் ஏற்படாது. எனவே கட்டாயமாக பிழைத்திருத்தல் பத்திரம் போட வேண்டும். 19. அடித்தல் – திருத்தல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? பத்திரத்தில் வார்த்தைகள் அடிக்கப்பட்டு மாற்றப்பட்டிருந்தால், அந்த இடத்தில் இரு தரப்பினரும் சான்று கையொப்பம் இட வேண்டும். 20. Attestation இல்லையெனில் என்ன ஆகும்? சர்வே எண் அல்லது சொத்து விவரங்களில் திருத்தம் செய்து, அதற்கு சான்றொப்பம் (Attestation) பெறவில்லை என்றால், அந்த பதிவு நீதிமன்றத்தில் செல்லாது என தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.